
கொலை செய்து தலைமறைவானதாகக் கருதப்படும் குற்றவாளியே கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிவதுதான், இந்த ‘த தின் மேன்’ படத்தின் ஒரு வரிக்கதை. நியூயார்க் நகரில் கிளைட் வைனன்ட் (Clyde Wynant) என்ற விஞ்ஞானி, தன் ஆய்வுக்கூடத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பில் மூழ்கிக் கிடக்கிறார். அவருடைய மகள் டொரோத்தி தன் காதலனை அறிமுகம் செய்து கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்ல, “இவர்ட்ட என்னப்பத்தி, உன்னப்பத்தி, உன் அம்மா பத்தி, அம்மாவோட பாய்ஃபிரண்ட் பத்தி சொல்லிட்டியா?” என்று கேட்கிறார், வைனன்ட்.
“எல்லாம் சொல்லியாச்சு” என்கிறாள், மகள். “தெரிஞ்சுமா கல்யாணம் பண்ணிக்க விரும்புறான்” என்று கிண்டலடிக்கும் வைனன்ட் வெளியூர் கிளம்புகிறார். அதற்குமுன் வங்கிக்குச் சென்று லாக்கரை செக் பண்ணுகிறார். அதில் எதுவுமில்லாத கோபத்தில் செக்ரட்டரி ஜூலியாவை திட்டி விட்டுச் செல்கிறார். பின் திரும்பி வரவே இல்லை. ஜூலியா கொல்லப்படுகிறார். அவளைக் கொன்றுவிட்டு வைனன்ட், தலை மறைவாகி விட்டார் என்ற செய்தி பரவுகிறது.

