சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத் தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை திருப்பி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக உள்ள ‘ஈசன் ப்ரொடக்ஷன்’ என்ற நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பட உரிமைகளை வழங்காததால் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விடக்கோரி தனபாக்கியம் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்ட போதும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஜப்தி குறித்து சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
The post நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு :படத் தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை திருப்பி செலுத்தாததால் நடவடிக்கை!! appeared first on Dinakaran.