ஒவ்வொரு மொழி திரையுலகிலும் குறைந்தது இரண்டு பிரிவுகள் இருக்கும். ஒன்று, முழு வணிக சினிமா. அதாவது மசாலாப் போக்குகள். இன்னொன்று, அதற்கு நேர்மாறான சீரிய சமூகப் பிரச்சனைகளை கலைநுட்பங்களுடன் விமர்சிக்கும் ‘பாரலல் சினிமா’ (Parallel cinema) என்ற போக்கு. இதைத் தாண்டி கலை சினிமா என்ற ஒன்றும் ஆங்காங்கே அறிவுஜீவித வட்டாரங்களில் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் 70, 80-கள் மற்றும் 90-களின் முதல் பாதி வரை கூட உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
வட இந்திய பாரலல் சினிமா / கலை சினிமா வகையில் கோவிந்த் நிஹாலினி, குமார் சஹானி, ஷியாம் பெனகல், சத்யஜித் ரே, மிருணாள் சென், கேத்தன் மேத்தா, குல்சார், மணிகவுல் போன்றவர்கள் சமூக விமர்சனப் படங்களைக் கொடுத்தனர். ஷியாம் பெனகல் படங்களில் அமிதாப் பச்சனையோ, தர்மேந்திராவையோ நாம் பார்க்க முடியாது.