*ஒருவருக்கு தீவிர சிகிச்சை
புதுச்சேரி :புதுவை முதலியார்பேட்டை வேல்ராம்பேட் துளுக்கானத்தம்மன் நகர், பாண்டியன் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (39). தச்சுத்தொழிலாளி. இவரது மகன் லத்தீஸ்வர் (13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லத்தீஸ்வருக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் அவரது நண்பர்கள் 5 பேருடன் வீட்டின் அருகே உள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கு சென்றுள்ளார்.
இதில் லத்தீஸ்வருக்கும், சரண் (10) ஆகியோருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் ஏரியின் கரைப்பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது மற்ற 3 நண்பர்களும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த லத்தீஸ்கர், சரண் ஆகியோர் திடீரென ஏரியில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனை கண்ட ஏரியில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் மூழ்கிய 2 பேரையும் தேடினர்.
அப்போது ஏரியில் மூழ்கிய சரண், லத்தீஸ்வர் ஆகிய இருவரையும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மீட்டனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் லத்தீஸ்வர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம் வேல்ராம்பட்டு ஏரியில் தவறி விழுந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.