சென்னை: ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025 என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள். விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.