புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வெளிநாட்டினர் வருகையை முறைப்படுத்த பாஸ்போர்ட் சட்டம்,வெளிநாட்டினர் பதிவு சட்டம், வெளிநாட்டினர் சட்டம், குடியேற்ற சட்டம் போன்றவை அமலில் இருந்தன. அவை ஒன்றிணைக்கப்பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்கப்பட்டது.
இந்த மசோதா கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்டம் 2025 நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது.