லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர் புல்லட் தான் என்றாலும் கூட செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அநீதி, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும் மோசமாகி உள்ளதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடந்தது என்ன? – லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக் களத்தில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9-ன் பெண் செய்தியாளர் லாரன் தாமஸ், நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “இங்கு போராட்டக் களத்தில் இருப்போரை போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி கலைத்து வருகின்றனர்.” என்று கூறுகிறார். அவர் கூறிமுடிக்கும் தருணம் அவரை ஒரு போலீஸ்காரர் குறிவைப்பதைக் கவனித்த கேமராமேன் கேமராவை அந்தப் பக்கம் திருப்ப, மின்னல் வேகத்தில் புல்லட் பாய்ந்து பெண் நிருபரை தாக்குகிறது. காலில் காயம் ஏற்பட்டு அவர் பதறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. வீடியோ ஆதாரத்தின்படி பெண் நிருபர் மீது நடந்தது தவறுதலான கிராஸ் ஃபயரிங் துப்பாக்கிச் சூடு அல்ல, திட்டமிட்டு அந்த போலீஸ்காரர் நிகழ்த்தியது என்பது தெளிவாகத் தெரிகிறது.