விவசாய நிலத்தை ஓட்டுநர் உதவியின்றி தானே உழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிராக்டர் ஒன்றின் சோதனை பஞ்சாப் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த டிராக்டர் செயற்கைகோள் உதவியுடன் சென்சார் மூலம் தகவல்களைப் பெற்று நிலத்தின் நீள அகலத்தை துல்லியமாக கணக்கிட்டு வெற்றிகரமாக உழுது முடித்து ஆராய்ச்சியாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Global Navigation Satellite System (GNSS) எனப்படும் செயற்கைகோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் தொடுதிரைக் கணினி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வெளிச்சம் குறைந்த நேரத்தில் கூட எந்த தடையுமின்றி நிலத்தை உழும் வகையில் டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஓட்டுநர் மூலமும், மற்ற நேரங்களில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே செயல்படும் வகையில் இரண்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.