திண்டிவனம்: திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகள் இந்துமதி (19). இவர் கடந்த 2022ம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
அதனை தொடர்ந்து டாக்டர் ஆகும் கனவுகளுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அந்த தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை நேற்று பெற்றனர்.
இந்நிலையில் ஓ.பி.சி சான்றிதழை இந்துமதியிடம் அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் நேற்று அளித்துவிட்டு விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளனர். மாலையில் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது இந்துமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை ராமதாஸ் கண்ணீர் மல்க கூறுகையில், ‘‘நீட் தேர்வின் மீதான பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்’’ என்றார்.
The post நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.