நீலகிரி : நீலகிரியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பருவமழை முன் கூட்டியே ஆரம்பித்துள்ளதால் நீலகிரியில் 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கூடலூர், பந்தலூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் சரிந்து விழுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் குழுவினர் மற்றும் மாநில மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. உதகை – 11, குந்தா – 13, குன்னூர் – 5, கோத்தகிரி – 2, கூடலூர் – 9, பந்தலூரில் 3 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. “காற்றுடன் பெய்த மழையால் கூடலூரில் சுமார் 300 வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. நீலகிரியில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 வீடுகள் சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊசிமலை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தளங்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
The post நீலகிரியில் வெளுத்து வாங்கும் கனமழை; 43 இடங்களில் மரங்கள் சாய்ந்தன: 4 வீடுகள் சேதம்; மாவட்ட நிர்வாகம் தகவல்!! appeared first on Dinakaran.