இந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல முக்கிய முடிவுகளை எடுத்தார். மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் நேருவுக்கு தனித்த தொலைநோக்குப் பார்வை இருந்தது. அதைக் கவனத்தில் கொண்டே பஞ்சசீலக் கொள்கையை அவர் உருவாக்கினார். 1954-ல் சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1955-ம் ஆண்டு ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் அணி திரண்ட பாண்டுங் மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகள்:
1. அனைத்து நாடுகளும் சமாதான சுகவாழ்வு வாழ வேண்டும்.
2. வலிமை குறைந்த நாடுகளை வலிமை மிக்க நாடுகள் துன்புறுத்தக் கூடாது.
3. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது.
4. தேவையுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வர வேண்டும்.
5. அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.