*ஒரு கிடா ரூ.38 ஆயிரம் வரை விற்பனை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில், பக்ரீத் பண்டிகை நெருங்குவதால், ஆடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன், நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஒரு பகுதியில், வாரந்தோறும் ஆட்டு சந்தை கூடுகிறது.
இங்கு, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடா வகை ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த மாதத்தில் கடந்த இரண்ட வாரமாக பரவலான மழையால் சந்தைக்கு ஆடு வரத்து குறைவாகவே இருந்தது. அந்நேரத்தில் அதிகபட்சமாக 300 ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தை நாளின்போது, அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால், சில வாரத்திற்கு பிறகு மீண்டும் ஆட்டு சந்தை களைக ட்டியது.
இந்நிலையில், நாளை (7ம் தேதி) பக்ரீத் பண்டிகை என்பதால், ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால், ஆடு விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன், வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் பெரிய அளவு கிடா வகை ஆட்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.23 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்துக்கே விற்பனையானதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.28 ஆயிரம் வரையிலும், கிடா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலைபோனது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.