மானாவாரி விவசாயத்தில் நிலக்கடலை, பருத்தி, கம்பு, சோளமும், ஆற்றுப்பாசனத்தில் பழைய ஆயக்கட்டு பகுதியில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று வந்த பொள்ளாச்சி பகுதியில், ஆழியாறு அணை கட்டப்பட்ட பின்னர் கிடைத்த நீர்வசதியை கொண்டு நீண்டகால பயிரான தென்னைக்கு இப்பகுதி விவசாயிகள் மாறினர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்றதால், பொள்ளாச்சி தென்னை நகரமாக மாறியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தென்னை சாகுபடி பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
முன்பு தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சிக்காக போராடிய விவசாயிகள், தற்போது தென்னை மரங்களை காப்பாற்றவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளை ஈ தாக்குதல், கூன் வண்டு, கேரளா வாடல் நோய் மற்றும் வறட்சி ஆகியவற்றால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தென்னை மரங்களை வெட்டி விட்டு மாற்று பயிருக்கு மாறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தென்னை விவசாயத்தில் இருந்து பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வேளாண் பட்டதாரி ஒருவர் லாபம் ஈட்டி வருகிறார்.