சென்னை: தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்கள் என 11 நபர்களுக்கு ரூ.8.25 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலைகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.03.2025) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத்தொகையாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான பட்டுவளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், நமது மாநிலத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும், தரமான விதைப் பட்டுக்கூடு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்றும், தரமான பட்டு நூல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு தலா முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1,00,000/- ரூபாய், 75,000/- ரூபாய் மற்றும் 50,000/- ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும், இதற்கென 9 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்களும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும், மூன்று சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு சு.ஜேக்கப் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வை. அருள்குமரனுக்கும்; மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நா.மஞ்சுநாதாவுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.நாகராஜூக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சே.சாந்த முர்த்திக்கும்; மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மு. முகமது மதீனுல்லாவுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.சேகருக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சுபத்ராவுக்கும்; மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த க.பிரகாஷுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ. வேதவள்ளிக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ரொசாரியோ லாசருக்கும்; என மொத்தம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11 பட்டு விவசாயிகள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள், தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைச் செயலாளர் வே. அமுதவல்லி, பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் கி.சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 11 நபர்களுக்கு ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.