மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் வலசை பறவைகள் திடீரென உயிரிழந்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. இந்தியாவின் இமயமலை, மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் ஏற்படும் அதிகளவு பனி தாக்கம், உணவு தட்டுப்பாட்டால், பறவைகள் வெப்ப மண்டல பகுதிக்கு வந்து செல்கின்றன.
அந்த வகையில், பண்ணவாடிக்கு அதிகளவிலான பறவைகள் வந்து செல்கின்றன. அதேபோல, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் பண்ணவாடிக்கு வந்து செல்கின்றன. இதனை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து பறவை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். மேலும், பறவைகளை படம் பிடித்து பதிவு செய்து வருகின்றனர்.