சென்னை: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்; மாணவர்கள் சாதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த 25ம் தேதி முடிந்தன. இதையடுத்து மே மாதம் 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை (28ம் தேதி) 10ம் வகுப்பு தேர்வு தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வில் 9 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், நாளை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்; பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தான் மாணவ, மாணவியர் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு ஆகும். எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது பத்தாம் வகுப்புப் பொதுதேர்வுகள் தான். எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டும்; பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்.. மாணவர்கள் சாதிக்க வேண்டும்!: அன்புமணி வாழ்த்து!! appeared first on Dinakaran.