இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் வாஷிங்டனில் நடந்த "இனிமையான" சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ராணுவத் தலைமைத் தளபதி சையத் அசிம் முனிர் விவாதித்ததாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அடுத்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்தார். அதிபர் ட்ரம்ப், அசிம் முனிருக்கு மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உளவுத்துறை தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.