நேப்பிடா: மியான்மரில் நேற்று காலை 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரை காணாததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.