*அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை
புவனகிரி : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு, விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.புதுப்பேட்டை, தில்லை விடங்கன், நக்கரவந்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு, ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்ட கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மதிப்பீட்டு தொகையானது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டதில் 2024-25ம் ஆண்டிற்கு 189 வீடுகளும், 2025-26ம் ஆண்டிற்கு 256 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்வது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்து சி.புதுப்பேட்டை, தில்லைவிடங்கன், சி.முட்லுர் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில், குடியிருப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுமான பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து நக்கரவந்தன்குடி ஊராட்சியில் 52 வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததோடு, இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு ஆக்கிரமிப்புகளில் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒருமுறை வரன் முறைப்படுத்தும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார். ஆய்வின்போது, சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
The post பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் ஆய்வு அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.