தமிழகத்தைப் பொறுத்தவரை கேரளா மட்டுமின்றி பிற அண்டை மாநிலங்களுடனும் நதிநீர் பங்கீடு பிரச்சினை காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. காவிரி, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் பிரச்சினைகள் உள்ளன. மேட்டுப்பாங்கான கர்நாடகாவில் மழை பெய்தபோதும், தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நீர் வராமல் அணைக்கட்டுகள் மூலம் தடுக்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து வரவேண்டிய பாலாறு இடையில் கணேசபுரத்தில் 7, 8 தடுப்பணைகளால் தடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட பாசனத்துக்கு வருகின்ற பொன்னியாற்றுக்கும் நீர் மறுக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை.
நீர் பங்கீடு பிரச்சினை என்றால் காவிரி, முல்லை பெரியாறு இவற்றைப்பற்றி மட்டும்தான் பேசுகிறோம். அதுதான் செய்தியாகிறது. அதுவும் முக்கியப் பிரச்சினைதான். அதேநேரம் இதுபோன்று 25 நதிநீர் பங்கீடு சிக்கல்கள் உள்ளன. இவையெல்லாம் எப்போது தீர்க்கப்படும் என தெரியவில்லை.