குன்னூர் : பருவமழையை எதிர்கொள்ள குன்னூர் ரயில்வே துறை சார்பில் தண்டவாளங்களில் இருபுறமும் மழைநீர் செல்ல ஏதுவாக சீரமைக்கும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பருவமழை காலங்களில் பிற மாவட்டங்களை விட நீலகிரி மாவட்டத்தில் அதிமாக மழை பெய்யக்கூடும்.
இது போன்ற காலங்களில் அரசு சார்பாக அனைத்து துறைகளும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வரக்கூடிய தென்மேற்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே குன்னூர் ரயில்வே துறை சார்பில் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களை கண்டறிந்து, ஆபத்துகள் நிறைந்த பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி, தண்டவாளங்களின் இருபுறமும் மழைநீர் செல்ல ஏதுவாக கால்வாய்கள் அமைத்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே துறையினர் கூறுகையில் ‘‘மழைநீர் செல்ல போதிய இடம் இல்லாததால் மழைநீரால் மண் ஊறிய நிலையில் இருப்பதால் பாறைகளும், மரங்களும் தண்டவளாய்களின் மீது விழுந்து, ரயில் போக்குவரத்து தடை படுகிறது. மழைநீர் செல்ல வழிவகை செய்து வரும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றனர்.
The post பருவமழையை எதிர்கொள்ள குன்னூர் ரயில்வே துறை சார்பில் சீரமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.