சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழியாக உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கி வருகிறோம். இதற்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் மாணவரின் ஆதார் எண் அவசியம். இந்நிலையில் தான் 2024 பிப்ரவரி 23ம் தேதி, மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தை தொடங்கி வைத்தோம்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் படிக்கும் ஒட்டுமொத்த மாணவ மாணவியர் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவ மாணவியருக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கை தமிழக அரசு எட்டியுள்ளது. ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்டு முதலிடம் பெற்றதற்காக ஒன்றிய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் நமது பள்ளிக்கல்வித் துறைக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
* 62 லட்சம் பேர் பயன்….
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 81 ஆயிரத்து 426 பேர். அவர்களில் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டவர்கள் 13 ஆயிரத்து 437, கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் செய்யப்பட்டவர்கள் 16 லட்சத்து 6 ஆயிரத்து 961 பேர். ஏற்கனவே புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டவர்கள் 62 லட்சத்து 25 ஆயிரத்து 210 பேர் ஆவர்.
The post பள்ளிகளில் ஆதார் பதிவு செய்து சாதனை: தமிழக கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு பாராட்டு appeared first on Dinakaran.