அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் பிரச்னை ஏற்படுகிறது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் பலகட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுசம்பந்தமாக மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து அண்ணாநகர் போக்குவரத்து துணைஆணையர் ஜெயகரன் தலைமையில், அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் கண்காணித்த பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து எச்சரிக்கை செய்ததுடன் தொடர்ந்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில், இதுசம்பந்தமாக அண்ணாநகரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், அண்ணாநகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நரேஷ்குமார் பேசியதாவது; பேருந்தில் மாணவர்கள் செல்லும்போது இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யவேண்டும். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும். பைக்கில் செல்லும்போது கண்டிப்பாக தலைகவசம் அணிந்து செல்லவேண்டும். ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்யக்கூடாது. மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. 18 வயது பூர்த்தியாகாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது.
அப்படி ஓட்டினால் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரவு நேரங்களில் ரேஸ் பைக் ஓட்டக்கூடாது. ரேஸ் பைக் ஓட்டுவது கண்டறிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். இதையடுத்து, ‘’பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யமாட்டோம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டி செல்லமாட்டோம். ஒரே பைக்கில் 3 பேர் பயணிக்கமாட்டோம். தலைகவசம் கண்டிப்பாக அணிந்து செல்வோம்’ என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
The post பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணிக்கக் கூடாது: போக்குவரத்து போலீசார் அறிவுரை appeared first on Dinakaran.