திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழநி பிரிக்கப்பட்டு, 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்ததுதான் திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் 7 சட்டப்பேரவை தொகுதி, ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 14 ஒன்றியம், 23 பேரூராட்சி, 306 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
இதில், ஆன்மிக தலமான பழநிக்கும், கோடை வாசஸ்தலமான மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதேபோல், தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டும் ஒன்று.