நெல்லை: “தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெற வைத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசியது: “ஒரு போரை படை தளபதிகள் முன்னின்று நடத்துவதைப் போல் தேர்தலில் பூத் முகவர்கள் முன்னின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் உங்களுக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழகத்தில் 7 இடங்களில் இதுபோன்ற பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி குமரி மண்டலத்துக்கான மாநாடு இங்கே நடைபெறுகிறது.