விளைநிலப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் மின்வாரியம், மின்மாற்றி பழுதானால் பழுதை சரிசெய்யும் செலவினத்தை தங்களையே ஏற்க வைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி கிணற்றுப் பாசன விவசாய நிலங்களுக்கு மும்முனை இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க ஏதுவாக குறிப்பிட்ட தொலைவுக்கு ஏற்பவும், மின் பயன்பாட்டுக் கணக்கின் அடிப்படையிலும் மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கும் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் அந்தப் பழுதை அப்பகுதியின் வயர்மென் சரிசெய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்மாற்றி ஒன்று பழுதான நிலையில், அந்தப் பழுதை நீக்க, வயர்மென் மற்றும் நில உரிமையாளர் ஆகியோர் வாடகை வாகனத்தில் மின்மாற்றியை ஏற்றிக்கொண்டு மணலூர்பேட்டையில் உள்ள மின் உபகரணங்கள் பழுது நீக்கும் கடைக்கு கொண்டு சென்றனர். அப்போது நில உரிமையாளரே வாடகை வாகனத்தை அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.