மதுரை / பெரம்பலூர்: தவெக மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு கடந்த 21-ல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொண்டர்கள், ரசிகர்களை விஜய் சந்திக்கும் வகையில் மேடையிலிருந்து 800 மீட்டர் நீளத்தில் ‘ரேம்ப் வாக்’ அமைக்கப்பட்டது. இந்நிலையில், அருகில் சென்று விஜயை பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசியதாகவும், அவர் ‘ரேம்ப் வாக்’ பக்கவாட்டு கம்பியைபிடித்துத் தொங்கி உயிர் தப்பியதாகவும் புகார்கள் எழுந்தன.