டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மாநில முதல்வராக ரேகாகுப்தா பதவியேற்றார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகைவழங்கப்படும். அடுத்த மாதம்8-ம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக தலைமை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.