நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.