ராணிப்பேட்டை: “மாசடைந்த பாலாற்றை மீட்பது குறித்தும், தேங்கி கிடக்கும் குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என சுற்றுச்சூழல் மதிப்பீடு, சூழல் இழப்பீடு, சூழல் தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு குழுத் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான சத்யநாராயணா கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் கலக்கப்படும் தோல் கழிவுநீர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கலக்கப்படும் கழிவுநீரால் பாலாறு மாசடைந்து காணப்படுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மாசடைந்த பாலாற்றை ஆய்வு செய்து பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.