புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பக்தர்கள் தங்குவதற்கு கூடார நகரம் அமைக்கப்பட்டது. இதில் நட்சத்திர விடுதிகளின் வசதிகளை உ.பி. அரசு செய்திருந்தது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை காலனியில் 2,100 கூடாரங்கள், 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றில் தங்குவதற்கு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இணையதளத்தில் முன்பதிவு செய்தனர்.
சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன் கூடாரங்களின் அறைகள், குடில்கள் இருந்ததால், லட்சக்கணக்கான வெளிநாட்டினரும் இங்கு வந்து தங்கினர். இந்நிலையில், தங்கும் கூடாரங்கள், உணவு விடுதிகள் என மாநில சுற்றுலா கழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகா கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் தனியார் கூடாரங்களுக்கும் ரூ.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை இறுதி கணக்கீட்டுக்கு பிறகு மேலும் உயரும் என்று தெரிகிறது.