பாட்னா: பிஹாரில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் புதிய மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி முதல்வர் நிதிஷ் குமாருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் மிகப் பெரிய போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘மொத்த இடஒதுக்கீட்டை 85 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்கான முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த மசோதா அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதித்துறை மறு ஆய்விலிருந்து பாதுகாக்கப்படும்.