பிஹாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறி, அந்த மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியினர் ஒருபுறமும், தேர்தல் ஆணையம் மறுபுறமும் பதில் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தமிழகத்தை இணைத்து வெளியிடப்படும் விமர்சனங்கள் தற்போது நாடு முழுக்க பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தொடங்கி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் துரைமுருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.