புதுடெல்லி: குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் முதல்வரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.
அவரை காவலர்கள் சோனை செய்து அனுப்பினர். மனு அளிக்க முதல்வர் ரேகா குப்தாவை நெருங்கிய அவர் சிறிது நேரம் பேசினார். பின்னர் முதல்வரை திட்டிய அவர் திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.