சென்னை: “சட்டபூர்வமாக செயல்பட வேண்டிய அமலாக்கத் துறையானது, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இப்படி அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது அத்துறைக்கு அழகும் அல்ல, சட்டப்படி ஏற்கத்தக்கதும் அல்ல. இத்தகைய அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் தேவைப்படும் சட்ட நடவடிக்கைகள் மூலமாக எதிர்கொண்டு முறியடிப்போம்,” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியை கொள்கைரீதியாக தொடர்ந்து வலுவாக எதிர்க்கும் கட்சிகளையும், மாநில அரசுகளையும் பழிவாங்குவதற்காக, மத்திய அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்தும் மத்திய அரசின் மேலும் ஒரு நடவடிக்கையாக, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக்கடன் வழக்கை தூசுதட்டி எடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை பற்றிய பல தவறான தகவல்களை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.