வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார்.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நியூராலிங்க் சிப் உதவியுடன் தனது அன்றாட வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உடல் அசைவில்லாமல் தன்னால் கணினி, ஏர் பியூரிபையர், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் உள்ள சமுதாய கல்லூரியில் தற்போது அவர் கல்வி பயின்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ல் நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தை அடுத்த அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது தோள்பட்டைக்கு கீழே உணர்வு மற்றும் இயக்கத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.