புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதியில் உள்ள முனியாண்டவர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. தஞ்சை, மதுரை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 8.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
முதலில கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பைக், மிக்ஸி, கட்டில், சைக்கிள், குத்துவிளக்கு, வேட்டி,சட்டை மற்றும் ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேனிமலை;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிகட்டு நடைபெற்றது. 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 250 வீரர்கள் களமிறங்கினர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் பாரம்பரிய முறைப்படி ஊர் ஜவுளி எடுத்துவரப்பட்டு கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வெளியூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இங்கு வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், குக்கர், டிவி, மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
The post புதுகை அருகே ஜல்லிக்கட்டு 500 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.