2016-ல் புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 2021 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனால் கொஞ்சம் தளர்ந்து போன அந்தக் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் சுதாரித்துக் கொண்டு புதுச்சேரியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், 2026-ல் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு தங்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் புதுச்சேரி காங்கிரஸார் மத்தியில் இப்போது மேலோங்கி வருகிறது.
அதேசமயம், தற்போது அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலை மீண்டும் நமக்கு சாத்தியப்படுத்தி விடலாம் என திட்டமிடுகிறது. இதற்காக தொகுதி வாரியாக செல்வாக்கான தலைகளை தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்துவருகிறார்கள். தேர்தல் பணிகளையும் காங்கிரஸுக்காக காத்திருக்காமல் முன்கூட்டியே தொடங்கி விட்டனர்.