பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த மனு தொடர்பாக அட்வகேட் ஜெனரல், சீலிட்ட உறையில் பதில் மனுவை தாக்கல் செய்வார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 3-ம் தேதி குஜராத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி ) அணி வெற்றி பெற்றதை அடுத்து, மறுநாள் பெங்களூரு விதானசவுதா வளாகத்திலும், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் வெற்றி விழா நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.