சேலம்: அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், அரசின் முன்அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து ஜாமீனையும் ரத்து செய்ய போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி சம்மன் அனுப்பினார். நேற்று முன்தினம், துணைவேந்தர் ஜெகநாதன் காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.15 மணி வரை 6.15 மணி நேரம், அவரிடம் விசாரணை நடந்தது. மீண்டும் 2வது நாளாக நேற்று காலை 11 மணிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடக்கும் விசாரணை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் மொத்தம் ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post பெரியார் பல்கலை துணைவேந்தரிடம் 2வது நாளாக போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.