சென்னை: ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு பேருந்துகளை சிறப்பாக இயற்றிய மாநிலங்களுக்கு தேசிய பொது போக்குவரத்து விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய மாநில சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில் 19 விருதுகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கிடைத்துள்ளது.
அகில இந்திய அளவில் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் முதல் இடம் பிடித்துள்ளது. அதேபோல், அகில இந்திய அளவில் நிதி நடைமுறைகளை சிறப்பாக பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு பணியாளர் உற்பத்தித்திறன் விருது கிடைத்துள்ளது. மேலும் மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை விருது கிடைத்துள்ளது.
வாகன பயன்பாட்டை (கிராமப்புறம்) பொறுத்தவரையில், மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. கிராமப்புற அளவில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தியதாக டிஎன்எஸ்டிசி விழுப்புரத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மேலும் முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 12 பிரிவுகளும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 7 பிரிவுகளும் சேர்த்து மொத்தம் 69ல் 19 பிரிவுகளில் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பேருந்துகளை சிறப்பாக இயக்கியதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 19 தேசிய விருதுகள் appeared first on Dinakaran.