சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்படங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும், கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 21ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றவில்லயெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர் தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
The post பொது இடங்களில் நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப்.21க்குள் அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.