*27ம் தேதி வரை நடைபெறுகிறது
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி என 4 வனசரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் வாழ்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு மற்றும் கோடைக்கால வன விலங்கு கணக்கெடுப்பு பணி என இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு முதல் துவங்கியது. அதுபோல், நடப்பாண்டிலும் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடத்த முடிவு செய்யப்பட்டு இப்பணியில் ஈடுபடுவோருக்கு முன்பு அட்டக்கட்டியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களிலும், நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
பெரும்பாலும் உயரமான மலைப்பகுதி மற்றும் மலைப்பாதைகளில் அதிகளவு வரையாடு உலா வருவதால் அப்பகுதியில் அதன் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் நடைபெற்ற வரையாடு கணக்கெடுப்பு பணியில் நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.
இப்பணியில் ஈடுபட்டவர்கள் நவீன பைனாகுலர் மூலம் வெகு தூரத்தில் செல்லும் வரையாட்டை துள்ளியமாக கணக்கெடுத்தனர். மேலும் செல்லும் வழியில் கால் தடம், எச்சம், முடி உதிர்தல் உள்ளிட்டவையை கண்டறிந்து வரையாடு கணக்கெடுக்கப்பட்டது. தற்போது துவங்கப்பட்டுள்ள வரையாடு கணக்கெடுப்பு பணி வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு ரூ.25 கோடியில் நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை துவங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக வரையாடு கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் திருப்பூர், கோவை என 3 வனக்கோட்டத்திலும் மொத்தம் 59 இடங்களில் வரையாடு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. வன எல்லையோரங்களில் வரையாடுகள் கணக்கெடுப்ப்பு பணியில் பல்வேறு குழுவினர் சென்றுள்ளனர். வரையாடு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது’’ என்றார்.
The post பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது appeared first on Dinakaran.