பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் வழங்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அளித்துள்ள தீர்ப்பு நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்களுக்கு முடிவுகட்டுவதற்கான தொடக்கம்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த குற்றம் 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு சமூக காரணங்களுக்காக புகார் அளிக்க முன்வரவில்லை. 2019-ம் ஆண்டு 19 வயதே ஆன பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் அளித்த புகார் காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. குற்றப் பின்னணியில் அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இருந்ததால் அரசுக்கு மகளிர் அமைப்புகள் மூலம் நெருக்கடி ஏற்பட்டு வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிஐ-க்கும் மாற்றப்பட்டது.