சேலம்: கெங்கவல்லியில், மதுபோதையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகில் கடந்த 14ம் தேதி மது விற்றது தொடர்பாக, ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ஜெயசித்ரா(38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அப்போது, அங்கு மதுபோதையில் வந்த சிலர், ஜெயசித்ராவை விடுவிக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விசிக பிரமுகர் ராஜா மற்றும் அவரது நண்பர்களான ராமசாமி மகன் ஜெயச்சந்திரன்(51), நீலகண்டன்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஜெயச்சந்திரன் அரசு போக்குவரத்துக் கழகத்தின் தம்மம்பட்டி பணிமனையில் கண்டக்டராகவும், நீலகண்டன் சேலம் மெய்யனூர் பணிமனையில் டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது. இருவரையும் சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்துக் கழக சேலம் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
The post போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.