தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையால்தான் விவசாயத்தில் மகசூலே கிடைக்கிறது. தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும். உலகில் தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மனித குலமே அழிய வாய்ப்புண்டு என்பதால் ‘தேனீக்கள் இன்றி அமையாது உலகு’ என்கின்றனர் சுற்றுச்சூழல் அறிஞர்கள்.
விவசாயம், சுற்றுச்சூழல் என மனித வாழ்வுக்கு உதவியாக உள்ள தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தி 2016-ம் ஆண்டு தேனீ வளர்ப்போர் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான அபிமோண்டியா மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உதவியுடன் ஸ்லோவேனியா குடியரசால், மே 20-ம் தேதி உலக தேனீக்கள் தினமாக கடைபிடிப்பதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. மே-20 தேதி, நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸாவின் பிறந்த நாள் என்பதால், ஐக்கிய நாடுகள் பொதுசபையானது 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதியை உலக தேனீக்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்துவரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.