புதுடெல்லி: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடருக்கான ‘டிரா’ நிகழ்வு நேற்று சிட்னியில் நடைபெற்றது. தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய மகளிர் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் முன்னாள் சாம்பியன்களான ஜப்பான், சீன தைபே மற்றும் வியட்நாம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 4-ம் தேதி வியட்நாமுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்பானுடனும், 10-ம் தேதி சீன தைபேவுடனும் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களும் சிட்னியில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த அணிகளில் இரண்டும் என மொத்தம் 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.