உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா ஆன்மிக நிகழ்வு பிரம்மாண்டமாக தொடங்கி, அது சற்றும் நீர்த்துப்போகாமல் நடந்து முடிந்துள்ளது.
2025 ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற்ற ‘மகா கும்பமேளா’ உலகின் பிரம்மாண்டமான, அமைதியான ஆன்மிக ஒன்று கூடல் என்று பெருமித அடையாளத்தைப் பெற்றுள்ளது. கங்கையும், யமுனையும், கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் இந்தப் புனித நீராடல் நடைபெற்று முடிந்துள்ளது. 45 நாட்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 66 கோடி பேர் கலந்து கொண்டனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இதன் பிரம்மாண்டத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்கா, ரஷ்ய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு நிகரான அளவில் பிரயாக்ராஜ் வந்து சென்றுள்ளனர் எனலாம்.