புதுடெல்லி: மகா கும்பமேளாவில் படகுகளை ஓட்டி ரூ.30 கோடி சம்பாதித்ததாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் பாராட்டப்பட்டவர் பிண்ட்டு மெஹ்ரா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின்போது தனது குடும்பத்தினருடன் 130 படகுகளை இயக்கி 30 கோடி ரூபாய் சம்பாதித்தவர் பிண்ட்டு மெஹ்ரா. பிரயாக்ராஜின் அரேலைச் சேர்ந்த இவர் மீது நைனி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவாகி உள்ளன. அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் தந்தை மீதும் கூட பிரயாக்ராஜின் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. படகோட்டியான பிண்ட்டு, அரேலில் வசிக்கும் பச்சா மெஹ்ராவின் மூன்றாவது மகன் ஆவார்.