வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
பாஜக-வைச் சேர்ந்த நமச்சிவாயம் முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளை திருமணம் செய்தவர் என்பதால், அவருக்கு மருமகன் முறை. 2011 சட்டப்பேரவை தேர்தலில் வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட இவர், வெற்றிபெற்று அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 2016-ல் மீண்டும் வில்லியனூரில் போட்டியிட்ட இவரை முதல்வர் வேட்பாளர் என பிரகடனம் செய்தது காங்கிரஸ்.